இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டுவரும் படகுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்று(20) அதிகாலை யாழ்ப்பாணத்தை அண்டிய கடற்கரையில் வைத்து, யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இந்தியாவிலிருந்து குறித்த படகு 350 கிலோகிராம் கஞ்சாவுடன் வருவதாக குற்றத்தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதனையடுத்து குறித்த படகிலுள்ள கஞ்சாவை கரையில் வைத்து கைப்பற்றும் நடவடிக்கையில் குற்றத்தடுப்பு பொலிஸார் ஈடுபட்டனர்.
அதற்கமைய கரைக்கு வந்த படகை கைப்பற்றிய பொலிஸார் அதில் பயணித்த இருவரையும் கைது செய்தனர்.
இருந்தபோதிலும் கொண்டுவரப்பட்ட கஞ்சா போதைப்பொருள் இடைநடுவில் கைமாற்றப்பட்டுள்ளதாகவும், குறித்த படகு இந்திய கடலில் பயணித்தமை ஜீ.பீ.எஸ் ஊடாக அவதானிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதனையடுத்து கைதானவர்களை அழைத்துச் செல்ல மோட்டார் சைக்கிளில் காத்திருந்த ஒருவர் 130 மில்லி கிராம் போதைப்பொருளுடன் கைதானதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள படகானது ஏற்கனவே போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு சிறையிலுள்ள ஒருவரது எனவும் சுட்டிகாட்டினார்.



