காணிகளை விடுவிக்கக்கோரி மயிலிட்டி பிரதேச மக்கள் ஆறாவது வெள்ளியும் போராட்டத்தில்!

யாழ். வலிகாமம் வடக்கு, மயிலிட்டி பகுதியிலுள்ள தமது காணிகளில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் எனக் கோரி கறுப்புக்கொடிகளை பறக்க விட்டு காணி உரிமையாளர்கள் இன்று(29) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இராணுவத்தினரின் “கொமோண்டோ ” பங்களா முன்பாக காணி உரிமையாளர்கள் இன்று(29) ஆறாவது வெள்ளிக்கிழமையாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
வலி. வடக்கிலுள்ள 248,249,251,255 மற்றும் 256 ஆகிய கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்த மக்கள் இராணுவ நடவடிக்கை காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத காலப் பகுதியில் சொந்த இடங்களில் இருந்து வெளியேறினர்.
அதன்பின்னர் அந்தப் பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக இருந்ததால் மக்கள் மீளவும் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
தற்போது யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும், அந்தப் பகுதிகளிலிருந்து பாதுகாப்புப் தரப்பினர் வெளியேறாத நிலையில்,அந்தப் பிரதேசங்கள் உயர்பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது.

இந்த நிலையில் தம்முடைய 651 ஏக்கர் வரையிலான காணிகளை விடுவிக்குமாறுகோரி பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடிவருகின்றனர். இருந்தபோதிலும் குறித்த காணிகள் விடுவிக்கப்படவில்லை.
அதனையடுத்து காணிகள் விடுவிக்கப்படும் வரை ஓவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் போராட்டத்தில் ஈடுபடுவதாக காணி உரிமையாளர்கள் தீர்மானித்தனர்.
அதற்கமைய காணி உரிமையாளர்கள் ஆறாவது வெள்ளிக்கிழமையாக இன்றும் கறுப்புக் கொடிகளை பறக்கவிட்டு தமது போராட்டத்தை முன்னெடுத்தனர்




