மீள ஆரம்பிக்கப்பட்ட செம்மணி புதைகுழி அகழ்வு: சிறுவர்கள் இருவரின் என்புக் கூடுகள் அடையாளம்!

இடைநிறுத்தப்பட்டிருந்த யாழ்.செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வுப் பணிகள் நேற்று (15) மீளவும் ஆரம்பிக்கப்பட்டன.
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க முன்னர் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
அந்த நிலையில் 32 நாட்கள் அகழ்வு பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்தன.
அதன்பின்னர் கடந்த 23 ஆம் திகதியுடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டன.
நிறுத்தப்பட்ட அகழ்வுப் பணிகள் மீண்டும் 33 ஆவது நாளாக நேற்றுப் புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது புதிதாக 2 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவை இரண்டும் சிறுவர்களுடையதாக காணப்படுகின்றன. மேலும், இரண்டு என்புக்கூட்டு குவியல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதனடிப்படையில், செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளில் 414 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டிருந்ததோடு, 409 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.




