

2027 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள முதலாவது ஐ.சி.சி. மகளிர் செம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியை நடத்தும் உரிமையை இலங்கை இழந்ததன் மூலம், சுமார் 20 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை இழந்துள்ளது.
இலங்கையில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த இந்தத் தொடர், தற்போது இந்தியாவுக்கு மாற்றப்பட்டுள்ளதோடு,எதிர்வரும் 2027ஆம் ஆண்டு பெப்ரவரி 14 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை மும்பை மற்றும் வதோதரா ஆகிய நகரங்களில் தொடர் நடைபெறவுள்ளது.
அரசாங்கத்தின் தலையீடு மற்றும் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் (SLC) தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகம் இல்லாத காரணத்தால், 6 நாடுகள் பங்கேற்கும் தொடரை இந்தியாவுக்கு மாற்றுவதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை கடந்த வாரம் அறிவித்திருந்தது.
கடந்த ஏப்ரல் மாதம் “ஷம்மி சில்வா” தலைமையிலான நிர்வாகம் பதவி விலகியதை அடுத்து, விளையாட்டுத்துறை அமைச்சரால் நியமிக்கப்பட்ட மறுசீரமைப்புக் குழுவே தற்போது நிர்வாகத்தை முன்னெடுத்து வருகின்றது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் விதிகளுக்கு முரணான முறையில் நிர்வாக மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமையே இந்த உரிமையை இழக்கக் காரணம் என சர்வதேச கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
2024ஆம் ஆண்டுக்கு பின்னர் அரசாங்கத் தலையீடு காரணமாக இலங்கை இழந்துள்ள இரண்டாவது சர்வதேச கிரிக்கெட் தொடர் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.




