
நாடு முழுவதுமுள்ள முக்கிய நகரங்களிலுள்ள போக்குவரத்து மையங்கள், வியாபார நிலையங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளில் 112 சிறப்பு அவசர சோதனைகளை நேற்று(21) நடத்தியுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
போக்குவரத்து மையங்களுக்கு அருகில் இடம்பெறும் நியாயமற்ற வர்த்தக முறைகேடுகளிலிருந்து நுகர்வோரைப் பாதுகாப்பதே இந்த சிறப்பு நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், உற்பத்தியாளரால் குறிப்பிடப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலையில் குளிர்பானங்கள், சிற்றுண்டிகள் மற்றும் பொதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்தல், பேக்கரி பொருட்கள், பிற உணவுப் பொருட்கள் மற்றும் பொருட்களின் விலைகளை நுகர்வோர் தெளிவாகப் பார்க்கும் வகையில் காட்சிப்படுத்தத் தவறுதல்,
பொதி செய்யப்பட்ட பொருட்களில் உற்பத்தி திகதி, காலாவதி திகதி, தொகுதி எண், உற்பத்தியாளரின் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட அத்தியாவசிய தகவல்களைக் குறிப்பிடத் தவறுதல், மற்றும் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனைக்குக் காட்சிப்படுத்துதல் ஆகியவை இந்த சோதனைகளின் போது கண்டறியப்பட்டுள்ளன.
இந்தக் குற்றங்களைச் செய்த வியாபார நிலையங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் மீது வழக்குகள் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.




