செம்மணி மனித புதை குழியை நாளை பார்வையிடவுள்ளது ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு!

யாழ்.செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைக்குழியில் முன்னெடுக்கப்படும் அகழ்வுப் பணிகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டத் தூதுக்குழு நாளை(22) பார்வையிடவுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் கார்மென் மொரேனோ தலைமையிலான இந்தத் தூதுக்குழுவில், இத்தாலியத் தூதுவர் டொமியானோ ஃபிரான்கோவிக், ஜெர்மனித் தூதுவர் டி பெலிக்ஸ் நியூமன், பிரான்ஸ் தூதுவர் ரெமி லாம்பர்ட் மற்றும் நெதர்லாந்துத் தூதர் வீபே டி போயர் ஆகியோர் இடம்பெறவுள்ளனர்.
செம்மணி மனித புதைகுழி தொடர்பான வழக்கு, இந்த வாரம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த தூதுக்குழுவின் பயணத்துக்காக நீதிமன்றத்தின் அனுமதி கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதன்படி, நீதிமன்ற அனுமதியுடன் குறித்த தூதுக்குழுவினர் வடக்குக்குச் விஜயம் செய்யவுள்ளனர்.
யாழ்ப்பாண நகரின் நுழைவாயிலில் அமைந்துள்ள செம்மணி மனித புதைகுழி, 1998 ஆம் ஆண்டில் இலங்கைப் படையால் பாடசாலை மாணவி கிரிஷாந்தி குமாரசுவாமி விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
கடந்த பெப்ரவரி மாதம், செம்மணி மயானத்திற்கான தகனமேடை அமைப்பதற்காக குழி தோண்டியபோது, மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அதனைதொடர்ந்து, யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தின் அதிகார வரம்புகுட்பட்டு, தொல்பொருள் ஆய்வாளர்கள், சட்ட மருத்துவ அதிகாரிகள் மற்றும் சட்டத்தரணிகளின் பங்களிப்புடன், நடைபெற்று வரும் இந்த அகழ்வுகள் கட்டங்கட்டமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நேற்று வரை செம்மணி மனித புதைகுழியிலிருந்து 454 என்புக்கூடுகள் வெளிப்பட்டுள்ளன.
அவற்றில் 440 மனித என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




