

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் கீழ் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பொதுமன்னிப்பை வலுவிழக்கச் செய்து உயர் நீதிமன்றம் இன்று (10) தீர்ப்பளித்துள்ளது.
காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியான சந்தியா எக்னெலிகொட உள்ளிட்ட தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலனை செய்ததன் பின்னர் உயர்நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஞானசார தேரருக்கு, 2018 ஆம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் ஆறு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
அந்தத் தண்டனையிலிருந்து ஞானசார தேரரை விடுவித்து, அந்தக் காலப்பகுதியில் ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனவால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
